அறிமுகம் :
உளுந்து தசைக்கு அதிக வலுவும், உற்சாகமும், அளிக்க வல்லது. வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு.

அவற்றின் பயன்களைக் காண்போம்…..
இடுப்பு வலுப்பெற :
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
உடல் சூடு தணிய :
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
உடல் வலு பெற :
கடும் நோயில் இருந்து மீண்டவர்களும் , உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம்.

இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடையும் .
உளுந்து வடை :

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு /ரத்தக் கட்டிகளுக்கு :
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி துணி சுற்றி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
குழந்தைகளுக்கு :

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
சிறுநீர் எரிச்சல், சுருக்கு நீங்க :

முதல் நாள் இரவு நீரில் உளுந்தை ஊறவைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரை மட்டும் அருந்த சிறுநீர் எரிச்சல், சுருக்கு நீங்கும்.சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.
தாது விருத்தியாக :
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.

நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை கஞ்சியாக்கிப் பாலுடன் இரவில் சாப்பிட ஆணுக்கு போக சக்தி, ஆர்வமும் பெருகும்.
பெண்களுக்கு ;
உடல் பலம் பெற :
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை.

இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இடுப்பு வலி குணமாகும்.
கர்ப்பப்பை வளர்ச்சியடைய :
கருத்தரிப்பதில் ஆர்வம் உள்ள பெண்ணும் உளுந்தை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். தாய்க்கு நல்ல பால் பெருகும்.

உடல் இளைப்பு, களைப்பு நீங்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை நல்ல பலமும், வளர்ச்சியும் அடைய உதவுகிறது.
மாதவிடாய் காலங்களுக்கு :

கர்ப்பப்பை வளர்ச்சி போதிய அளவில் ஏற்படாமல், வயதிற்கு வந்தபின் மாதவிடாய்க் கசிவு போதுமான அளவு வெளிப்படாமல் இருத்தல், கருத்தரிக்கா விட்டாலும் மாதவிடாய் காலங்களில் கடும் வேதனையுற்றாலும் உளுந்து சேர்ந்த அரிசியை வேக வைத்து உண்பது, உளுந்தாலான பணியாரத்தை நல்லெண்ணெயில் தயாரித்து உண்பது, எள்ளும் உளுந்தும் உணவில் அதிகமாகச் சேர்ப்பது அதிகம் உதவுகிறது.

ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க :

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.